ஆண்களின் வெற்றிக்கு பின்னால் பெண்கள் தான் உள்ளனர்- முக ஸ்டாலின்
கரூர் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மு.க. ஸ்டாலின், “மக்கள் சபை கூட்டம், மகளிர் மாநாடு என ஒரு கல்லில் இரண்டு மாங்காயை எம்எல்ஏ செந்தில்பாலாஜி அடித்துள்ளார். பேசாமல் இங்குள்ள பெண்கள் முகத்தை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது. அரசியல்வாதி, தொழில் அதிபராக ஆண்கள் இருந்தாலும் அவர்களை உற்சாகப்படுத்துவது பெண்கள்தான். ஆண்களின் வெற்றிக்கு பின்னால் பெண்கள் தான் உள்ளனர்.
ஜெயலலிதா மறைந்து 5 வருடம் முடிய போகிறது. எடப்பாடி நேரடியாக முதல்வராக தேர்ந்தெடுகப்படவில்லை. திமுகவை பொறுத்தவரை வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் ஒன்றுதான். 1.1 சதவீத வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். அரசியல் ரீதியாக ஜெயலலிதா எப்போதும் எதிரிதான். இருப்பினும் ஜெயலலிதா உயிரிழந்தவுடன், அவருக்கு கலைஞர் மரியாதை செய்துவிட்டு வரக் கூறினார். ஜெயலலிதா இருமுறை பதவியில் இருந்து இறங்கியபோது, ஓபிஎஸ் முதல்வரானார். ஜெயலலிதா இறந்த பிறகு ஓபிஎஸ் முதல்வரானார். சட்டப்பேரவையில் என்னை பார்த்து சிரித்ததால் ஓபிஎஸ் பதவி இழந்தார்.
ஜெயலலிதா இறப்பு குறித்த விசாரணை கமிஷன் விசாரணை 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. ஆனால் ஜெயலலிதா இறப்பு குறித்து ஒரு துளியளவு கூட வெளி வரவில்லை. ஓபிஎஸ் 8 முறை சம்மன் அனுப்பியும் ஜெயலலிதா விசாரணை ஆணையத்துக்கு போகவில்லை. 4 மாதத்தில் ஆட்சிக்கு வர போகிறோம், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் விசாரணை ஜெயலலிதா உயிரிழப்பு குற்றவாளியை கண்டுபிடித்து மக்கள் மன்றம் முன்பு நிறுத்தி சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதுதான்.
பல அமைச்சர்கள் மீது ஏற்கனவே ஊழல் புகார் பார்ட் 1 கொடுத்துள்ளோம், அடுத்த பார்ட் 2 வில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது விரைவில் ஊழல் புகார் கொடுப்போம். ஒரு அமைச்சர் குட்கா விஜயபாஸ்கர். இன்னொருவர் எஃப்சி விஜயபாஸ்கர். அதிமுக அமைச்சர்கள் விரைவில் சிறைக்கு போக உள்ளனர். விரைவில் மக்கள் ஆதரவுடன் நாங்கள் ஆட்சிக்கு வர உள்ளோம்” எனக் கூறினார்.