பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்க காவல்துறையினருக்கு ஸ்டாலின் உத்தரவு

 

பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்க காவல்துறையினருக்கு ஸ்டாலின் உத்தரவு

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் செயல்பாடுகள் குறித்தும், துறையின் வாயிலாக மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், புதியதாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.

பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்க காவல்துறையினருக்கு ஸ்டாலின் உத்தரவு

இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “காவல்துறை என்பது, குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத் தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத வகையில் சூழ்நிலையை உருவாக்கும். துறையாக செயல்பட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை களைந்திட கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதை தலையாய கடமையாக கொண்டு செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், காவலர்களுக்கான சலுகைகள், விடுப்புகள், வீட்டுவசதிக்கான வழிமுறைகளை மேம்படுத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தடய அறிவியல் துறையின் செயல்பாடுகளான தடயங்களை கண்டறிய சேகரிக்க குற்ற நிகழ்விடத்தில் தடய ஆய்வு செய்தல், குற்ற சான்றுப் பொருட்களை (crime exhibits) ஆய்வு செய்தல், குற்றம் புரிந்தவரை கண்டறிவதில் காவல் துறைக்கு உதவி புரிதல், தடய அறிவியல் ஆய்வறிக்கை குறித்து நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தல், (expert witness), காவல் துறை, நீதித் துறை மற்றும் மருத்துவ அலுவலர்களுக்கு தடய அறிவியல் குறித்த பயிற்சி அளித்தல் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

பேரிடர் காலங்களில் மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் தீயணைப்பு துறைக்கு தேவையான பயிற்சிகளையும், உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்து சேவையாற்றிட வேண்டும் என்றும், பொதுமக்களுக்கும் தீ தடுப்பு நடவடிக்கைகளை பயிற்றுவித்து தீ விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும், சாலை பாதுகாப்பு, அதிக விபத்து ஏற்படும் கரும்புள்ளி (Blackspots) பகுதிகளை கண்டறிந்து அவற்றை சரிசெய்யும் பணிகளை துரிதப்படுத்துதல், முக்கிய சாலைகளில் சாலைப் பாதுகாப்பை தணிக்கை செய்து அதன் அடிப்படையில் உரிய தொடர் நடவடிக்கை எடுத்தல், சாலைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் பாதசாரிகளின் பாதுகாப்பிற்காக நடைபாதைகளை ஏற்படுத்துதல், வட்டார போக்குவரத்து அலுவலகம்/ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் மாதிரி வாகன பயிற்சி வடிவம் (Simulators) வழங்குதல் மற்றும் அதற்கான பயிற்சியை மேம்படுத்துதல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்க காவல்துறையினருக்கு ஸ்டாலின் உத்தரவு

அத்துடன், சாலை பாதுகாப்பை வலுப்படுத்திட தகவல் மேலாண்மை மையம் ஏற்படுத்திட வேண்டும் என்றும், விபத்துகள் நடந்த இடங்களை அறிவியல் பூர்வமாக பகுப்பாய்வு செய்திடவும், அதிக வாகன விபத்துகள் ஏற்படும் இடங்களுக்கு அருகாமையில் உள்ள கடைகள்/உணவகங்களில் உள்ள நபர்களுக்கு முதலுதவி செய்யும் முறைகள் குறித்து பயிற்சி அளித்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பள்ளி மாணவ, மாணவியருக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் வாடகைக் கட்டடங்களில் இயங்கும் நீதிமன்றங்களுக்கு வரும் 5 ஆண்டுகளில் சொந்தக் கட்டடம் கட்டவும், நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும், சிறைகளின் பாதுகாப்பு, மத்திய சிறைகள், மாவட்ட சிறைகள், பெண்கள் தனிச் சிறைகள், கிளைச் சிறைகள், பாஸ்டல் பள்ளிகள், திறந்த வெளிச் சிறைகள் ஆகியவற்றின் இடவசதி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிறைவாசிகளால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் தோட்ட உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய அமைக்கப்பட்டுள்ள சிறை அங்காடியின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், இப்பணியினை நன்கு விரிவுப்படுத்த கேட்டுக் கொண்டார்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் மது அருந்துதல் மற்றும் போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணாக்கர்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் மூலம் மாவட்டங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விழிப்புணர்வுப் பேரணி, கருத்தரங்குகள், தெரு நாடகங்கள் போன்றவற்றை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.

துவிலக்கு அமலாக்கப்பிரிவு மூலம் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை முற்றிலும் ஒழித்திட வேண்டும் என்றும், போலி மதுபானம் தயாரிப்பு, எரிசாராயம் கடத்தி விற்பனை செய்வது, பிறமாநில மதுபான வகைகளை கடத்தி விற்பனை செய்வது, ஆகியவற்றை தடுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், மனம் திருந்திய மதுவிலக்கு குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு நிதி அளிப்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.