“அன்பு சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” – தெற்கிலிருந்து பறந்த இரு வாழ்த்துகள்!
காங்கிரஸ் முன்னாள் தலைவருமான எம்பியுமான ராகுல் காந்தி இன்று தனது 51ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்களும் தலைவர்களும் கொண்டாடி வருகின்றனர். மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குகின்றனர். அவருக்கு தங்களது வாழ்த்துகளையும் கூறுகின்றனர். கட்சி பாகுபாடின்றி பல்வேறு தலைவர்களும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.
இச்சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “எனது அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறிக் கொள்கிறேன். அனைத்து வடிவிலும் சமத்துவ இந்தியாவை உருவாக்குவதற்காக அவரது தன்னலமற்ற, அயராத உழைப்பை வியந்து பாராட்டுகிறேன். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்து அனைவருக்கும் முன்மாதிரியாக விளங்குகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவரது ட்வீட்டில், “அன்பு சகோதரர் ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையை காக்க காங்கிரஸ் பேரியக்கத்தோடு முத்தமிழறிஞர் வழியில் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டலில் நாங்கள் என்றும் தோளோடு தோள் நிற்போம். ராகுல் அவர்களுக்கு அன்பும் வாழ்த்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.