கோவை சிறைவாயிலில் தவறவிட்ட தோட்டாக்கள், பெண் காவலரிடம் ஒப்படைப்பு
கோவை
கோவை மத்திய சிறை வாசலில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள், அதனை தவறவிட்ட பெண் காவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவை வ.உ.சி பூங்கா சாலையில் மத்திய சிறையின் நுழைவு வாயில் உள்ளது. நேற்று சிறை வாயிலின் அருகே சாலையில் 5 துப்பாக்கி தோட்டாக்கள் கேட்பாரற்று கிடந்தன. இதுகுறித்து வாகனஓட்டிகள் அளித்த தகவலின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து சென்று தோட்டாக்களை மீட்டு விசாரணை நடத்தினர்.
இதில், அந்த தோட்டாக்கள் கைதிகளை ஆஜர்படுத்த வரும் போலீசார் பயன்படுத்தும் பாயிண்ட் 410 மஸ்கட் ரக துப்பாக்கியில் பயன்படுத்தும் போட்டார்கள் என்பது தெரியவந்தது. மேலும், கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் இருந்து, கோவை சிறைக்கு கைதியை அழைத்துச்செல்ல வந்த பெண் காவலர் ஒருவர் அதனை தவறவிட்டு சென்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து, ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய போலீசார் அந்த தோட்டாக்களை பெண் காவலரிடம் ஒப்படைத்தனர்.