கொரோனா சிகிச்சை பெற்று வரும் திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன்.. நேரில் சென்று நலம் விசாரித்த அமைச்சர்!
தமிழகத்தில் பொதுமக்கள் முதல் ஆளுநர் மாளிகை வரையில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. தொற்று ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக குரோம்பேட்டை ரிலா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் கடந்த 2 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஜெ.அன்பழகனுக்கு உயிர்காக்கும் கருவி மூலம் 80 சதவீத ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருவதாகவும் நேற்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் அன்பழகனின் உடல் நிலை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று நலம் விசாரித்திருக்கிறார். மேலும், அன்பழகனின் உடல்நிலை குறித்து முதல்வர் பழனிசாமியும் விசாரித்துள்ளார்.