ரூ. 25 லட்சத்தை தூய்மை பணியாளர்களுக்கு வழங்கிய லாரன்ஸ்! நன்றி தெரிவித்த அமைச்சர்

 

ரூ. 25 லட்சத்தை தூய்மை பணியாளர்களுக்கு வழங்கிய லாரன்ஸ்! நன்றி தெரிவித்த அமைச்சர்

நடிகர் ராகவா லாரன்ஸ் படங்களில் நடிப்பது, படங்கள் இயக்குவது என பிசியாக இருந்தாலும் தொடர்ந்து தனது மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஏழை எளியவர்கள் என பலருக்கும் உதவி செய்து வருகிறார்.கொரோனா தடுப்பு நிதியாக 3கோடி ரூபாய்க்கு மேல் நிதியுதவி செய்துள்ளார். மீண்டும் ரூ.50 லட்சம் அம்மா உணவகத்திற்காக நிதியுதவி செய்துள்ளார். மேலும் நடிகர் சங்கத்துக்கு ரூ.25 லட்சம், விநியோகஸ்தர்களுக்கு ரூ.15 லட்சத்துக்கான காசோலையையும் ராகவா லாரன்ஸ் வழங்கினார். மேலும் பலரிடமிருந்து உதவி வேண்டி தனக்கு அழைப்பு வருவதாகவும், உதவ நினைப்பவர்கள் பொருட்களாக அனுப்பலாம் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். மேலும் பல்வேறு பிரபலங்களிடமிருந்து பொருட்களை வாங்கி ஏழைகளுக்கு அனுப்பிவைத்தார்.

இந்நிலையில் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிப்பதற்காக பெறும் சம்பளத்திலிருந்து ரூ.25 லட்சத்தை தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்குவதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் ராகவா லாரன்ஸ் அறிவித்தார். இதன்படி, 3,385 தூய்மைப் பணியாளர்களுக்கு தலா ரூ.750 வீதம் ரூ.25,38,750 தொகையை தூய்மைப் பணியாளர்களின் வங்கிக் கணக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில், “தனது அடுத்த படத்தின் சம்பளத்திலிருந்து அல்லும் பகலும் அயராது #COVID19-ஐ எதிர்த்து களத்தில் போரிட்டுக் கொண்டிருக்கும் 3,385 தூய்மைப் பணியாளர்களின் வங்கி கணக்குகளில் ரூ. 25 லட்சத்தை செலுத்தியுள்ள சகோதரர் திரு. @offl_Lawrence அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.