அதிமுக அரசுதான் கொரோனாவை தோற்றுவித்ததா? ராஜேந்திர பாலாஜி காட்டம்!

 

அதிமுக அரசுதான் கொரோனாவை தோற்றுவித்ததா? ராஜேந்திர பாலாஜி காட்டம்!

அதிமுக அரசுதான் கொரோனாவை தோற்றுவித்தது போலவும், தாம்தான் அதனை கட்டுப்படுத்துவது போலவும் அறிக்கை விடுவதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ நாள் ஒன்றுக்கு ஒரு அறிக்கை வீதம் ஆள்வைத்து அறிக்கை விடுத்து தானும் அரசியலில் இருப்பதாக ஸ்டாலின் காட்டிக்கொள்கிறார். கொரோனாவில் இருந்து தமிழக மக்களை காப்பதற்கும் உயிரிழப்பை தடுக்கவும் எளிமை சாமானியர் எடப்பாடி பழனிசாமியின் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தொடங்கி, உலக சுகாதார அமைப்பு வரை பாராட்டுகின்றனர். கொரோனா எதிர்ப்புப்பணியில் நாட்டுக்கே வழிகாட்டும் மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையோடு முதலமைச்சருக்கு உயர்ந்துவரும் செல்வாக்கை கண்டு ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ளார்.

அதிமுக அரசுதான் கொரோனாவை தோற்றுவித்ததா? ராஜேந்திர பாலாஜி காட்டம்!

மருத்துவ நிபுணர்கள், வல்லுநர்கள் ஆலோசனைப்படி கொரோனா நோய் ஒழிப்பில் நல்ல ஆலோசனைகளை ஸ்டாலின் வெளியிட்டதுண்டா? கொரோனா நோய், வெளிநாட்டில் இருந்து வந்தவர்களாலும் தமிழ்நாட்டில் இருந்து டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்களாலும்தான் ஆரம்பத்தில் பரவியது என்ற உண்மையை மறைத்து முதலமைச்சர் மீது அவதூறு கூறுவது கண்டனத்திற்குரியது. அதிமுக அரசுதான் கொரோனாவை தோற்றுவித்தது போலவும், ஸ்டாலின்தான் கட்டுப்படுத்துவது போலவும் தினமும் அறிக்கை விடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தூங்குபவர்களை எழுப்பிவிடலாம், தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்பது போல ஸ்டாலின் அறிக்கை உள்ளது. இரவு பகல் பாராது, இமைசோராது உழைக்கும் அரசின்மீது பழி போடுவது தொடருமானால், கொரோனா ஒழிவதற்கு முன்பாகவே தமிழக அரசியலில் இருந்து திமுக அழிந்துவிடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.