தாளவாடியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் முத்துச்சாமி!

 

தாளவாடியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் முத்துச்சாமி!

ஈரோடு

தாளவாடி தொட்டகாஜனூர் துணை சுகாதார நிலையத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ‘மக்களை தேடி மருத்துவம்” திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டம் தொட்டகாஜனூர் துணை சுகாதார நிலையத்தில் சுகாதாரத்துறை சார்பில் ‘மக்களை தேடி மருத்துவம்” திட்ட துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு கொடியசைத்து திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் 68 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை, முதியோர் உதவி தொகை மற்றும் புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது, “தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சரின் தொலைநோக்கு திட்டங்கள் என்ற தலைப்பில் பல்வேறு திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டு உள்ளது. மாவட்ட ஆட்சியர், சுகாதாரத் துறையை சேர்ந்த அலுவலர்களும், தாளவாடி ஆரம்ப சுகாதார மையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தும் திட்டத்தை அரசுக்கு அனுப்பி உள்ளனர். இங்கு ஏற்கனவே 5 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்திட்டம் நிறைவேற்றப்படும்போது, கூடுதல் வசதிகள் மேற்கொள்ளப்படும்”.

தாளவாடியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் முத்துச்சாமி!

“இங்குள்ள மலைவாழ் மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக கீழே இறங்கி செல்லும் சூழல் உள்ளது. அதனை தவிர்த்து, ஆரம்ப சுகாதார மையத்தை முழுமையான பயன்பாட்டிற்கு மருத்துவமனையாக கொண்டு வரும் பட்சத்தில், பல்வேறு சிரமங்கள் தவிர்க்கப்படும். எனவே இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசென்று, விரைவில் நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். தொடர்ந்து, தாளவாடி வட்டாரத்தைச் சார்ந்த தொட்டகாஜனூர் துணை சுகாதார நிலையத்தில் ‘மக்களை தேடி மருத்துவம்” திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது”.

இந்த திட்டம் முதற்கட்டமாக தாளவாடி வட்டாரத்திலும், பின்னர் ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் படிப்படியாக நடைமுறை படுத்தப்பட உள்ளது. இதில், தாளவாடி வட்டாரத்தில் முதற்கட்டமாக 1,409 பயனாளிகள் பயன்பெற உள்ளனர். மேலும், படுத்த படுக்கையில் உள்ள நோயாளிகளுக்கு இயன்முறை சிகிச்சை, நோய்த தடுப்பு பராமரிப்பு பணியாளர்கள் மற்றும் உடற்பயிற்சி சிகிச்சையாளர் மூலம் சிகிச்சை வழங்கப்பட உள்ளன”, என அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில், ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, எம்.பி., செல்வராஜ், அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி. வெங்கடாச்சலம், துணை இயக்குநர் சுகாதார பணிகள மரு.சவுண்டம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.