நீட் தேர்வுக்குத் தயாராக வேண்டியது மாணவர்களின் கடமை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் இந்த நிமிடம் வரை நீட் தேர்வு நடைமுறையில் உள்ளது எனவும், மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”நீட் தேர்வில் இருந்து முறையாக விலக்கு பெற தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது, இந்த நிமிடம் வரை நீட் தேர்வு நடைமுறையில் உள்ளதால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும். ஓ.பி.எஸ் துணை முதலமைச்சராக இருந்த போது தான் நீட் தேர்வு தமிழகத்துக்குள் நுழைந்தது. அப்போதெல்லாம் பேசாமல் ஓ.பி.எஸ் இப்போது அறிக்கை விடுகிறார். கொரோனா மூன்றாவது அலை வரக்கூடாது என்பது தான் அரசின் எண்ணம். ஒருவேளை மூன்றாவது அலை தாக்கினால் அதனை எதிர்கொள்ள அரசு அனைத்து வகையிலும் தயாராக உள்ளது.
கொரோனா இறப்புகளை மறைப்பதால் அரசுக்கு எந்த லாபமும் இல்லை. ஆதலால் மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை. தென் சென்னையில் பன்னோக்கு மருத்துவமனைக்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திட்டமதிப்பீடு மற்றும் வரைபடம் தயாரிக்க பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.