திமுக கூட்டணியை சேர்ந்த 38 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வேஸ்ட்- கடம்பூர் ராஜூ

 

திமுக கூட்டணியை சேர்ந்த 38 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வேஸ்ட்- கடம்பூர் ராஜூ

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, “ திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாரத்தில் இருந்த போது மக்களின் குறைகளை தீர்க்காமல் எங்கே போய் இருந்தார். அதிகாரத்தில் இருந்த போது செய்ய வேண்டிய பணிகளை அப்போதே செய்யாமல் எதிர்கட்சி தலைவராக இருந்து மக்களை ஏமாற்றுகிறார். தேர்தல் வந்தாலே ஏமாற்று வேலையில் கைத்தேர்ந்தவர்கள் திமுகவினர். மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது முன் மாதிரியாக கிராமசபை கூட்டம் நடத்தி மக்கள் பிரச்சினைகளை தீர்த்து இருந்தால் பாராட்டலாம். கொரோனா பரவல் இருந்தாலும், அதையும் தடுத்து, வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு அதிமுக அரசு மக்களிடம் நல்ல பெயரை எடுத்துள்ளது.

திமுக கூட்டணியை சேர்ந்த 38 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வேஸ்ட்- கடம்பூர் ராஜூ

நாடாளுமன்ற தேர்தலின் போது திமுகவினர் கோடிக்கணக்கான மனுக்கள் வாங்கினர். அதனால் என்ன பயன், ஏதவாது ஒரு மனுவிற்கு தீர்வு கண்டு உள்ளனரா? தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி வெற்றி பெற்று 2 ஆண்டுகள் ஆகிறது. அவர் எந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளார்? கோவில்பட்டியில் ஜி.எஸ்டி பிரச்சினையினால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்ட போது கனிமொழி எம்.பி.கண்டுகொள்ளவில்லை. அதிமுக அரசு தான் தீப்பெட்டி உற்பத்தியாளர்களை டெல்லிக்கு அழைத்து சென்று மத்திய அரசுடன் பேசி 18 சதவீத ஜி.எஸ்.டி வரியை 12 சதவீதமாக குறைத்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்ய வேண்டிய பணிகளை கூட தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி செய்கிறோம். திமுக கூட்டணி 38 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வேஸ்ட். 38 எம்.பி.கள் தமிழகத்திற்கு எதை பெற்று தந்து இருக்கிறார்கள். அரசியல் தான் செய்கின்றனர். மதிமுக பொது செயலாளர் வைகோ தனது இருப்பினை காட்டி கொள்ள முதல்வர் மீது குற்றம்சாட்டுகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி உழவர் மகன் மட்டுமல்ல அவரே ஒரு விவசாயி தான். முதல்வரிடம் போலித்தனம் கிடையாது, யதார்த்தமான சாமனிய முதல்வராக மக்கள் அவரை ஏற்றுக்கொண்டுள்ளனர். தமிழ், தமிழ் என்று பேசுபவர்கள் தமிழர் திருநாள் தைப்பொங்கலுக்கு பணத்தை வாரி வழங்கி இருக்கலாமே. அதிமுக ஆட்சி காலத்தில் தான் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகையாக ரூ.2500 வழங்கப்பட்டுள்ளது

மன்னர் காலத்தில் இருந்த குடிமரமாத்து என்ற பணியை மீண்டும் தமிழகத்தில் முதல்வர் கொண்டு வந்த காரணத்தினால் தான் மழைநீர் வீணாகாமல் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. முதல்வர் விவசாயியாக இருக்கின்ற காரணத்தினால் தான் அடிப்படைகளை புரிந்து கொண்டு செய்து வருகிறார். இதுவரை இது போன்று எந்த முதல்வர் செய்துள்ளார். இது அண்ணன் வைகோவிற்கு தெரியவில்லையா என்பது தான் எங்களுடைய கேள்வி? தமிழகத்தினை பொறுத்தவரை தேசிய கட்சிகள் அதிமுக, திமுகவுடன் தான் கூட்டணியில் இருக்கின்றன. தமிழக தேர்தலை பொறுத்தவரை அந்த நிலையில் தான் எதிர்கொள்ள முடியும். நாடாளுமன்ற தேர்தலின் போது தேசியகட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம். ஆனால் மாநில தேர்தலை பொறுத்தவரை அதிமுக, திமுக தலைமையிலான கூட்டணியில் தான் தேசியகட்சிகள் இருக்கும். இது தான் நடைமுறை” எனக் கூறினார்.