‘முன்ஜாமீன்’ கோரி அமைச்சர் கடம்பூர் ராஜூ மனு!
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், வேட்பாளர்கள் அனைவரும் அதிரடியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ மக்கள் மத்தியில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். அண்மையில், ஊத்துப்பட்டி விலக்கு அருகே பிரச்சாரம் மேற்கொண்ட போது அமைச்சர் கடம்பூர் ராஜூவின் வாகனத்தையும் அவரது ஆதரவாளர்களின் வாகனத்தையும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட முயன்றனர்.
அப்போது, கடம்பூர் ராஜூவின் ஆதரவாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டதாக தெரிகிறது. இதையடுத்து, அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பறக்கும் படை அதிகாரி மாரிமுத்து அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது நாலாட்டின்புதூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரின் பேரில், கடம்பூர் ராஜூ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், முன்ஜாமீன் கோரி அமைச்சர் கடம்பூர் ராஜூ மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார். தன் மீது அவதூறு பரப்பும் நோக்கிலும் அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முன்ஜாமீன் வழங்கும் பட்சத்தில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த மனு விரைவில் விசாரிக்கப்பட உள்ளது.