“திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் விநியோகம்” – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல்
ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் போதிய அளவு தண்ணீர் உள்ளதால், திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளுக்கு பற்றாக்குறை இன்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் இன்று நேரில் ஆய்வுமேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பருவமழை காலத்தில் பெய்யக்கூடிய கனமழையினால் பெறப்படும் மழைநீரை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களில் சேமிப்பதற்கென, துரிதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கூறினார். காமராஜர் அணையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மதகுகள் சரிவர பராமரிக்கப்பட்டதால் தற்போது 6 ஆயிரம் மில்லியன் லிட்டர் கனஅடி நீர் உள்ளதாக தெரிவித்தார். தற்போதைய நீர் இருப்பை கொண்டு திண்டுக்கல் நகருக்கு தினசரி 12 மில்லியன் லிட்டர் குடிநீர் என்ற அளவில் அடுத்த ஆண்டு முழுவதும் பற்றாக்குறை இன்றி குடிநீர் வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதன் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் அதிகளவில் நீர் சேமிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, குடிநீர் ஆதாரம் அதிகரித்துள்ளது. இதனை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.