மத்திய அரசின் கொள்கைகளை ஏற்காதவர்களுக்கு சம்மன் அனுப்புவது ஒரு சடங்காக மாறி விட்டது.. மெகபூபா முப்தி
மத்திய அரசின் கொள்கைகளை ஏற்காதவர்களுக்கு, தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் மூலம் சம்மன் அனுப்புவது ஒரு சடங்காக மாறி விட்டது என்று மெகபூபா முப்தி குற்றம் சாட்டினார்.
காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியின் தயார் குல்ஷன் நசீர். பணமோசடி வழக்கில் நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி, குல்ஷன் நசீருக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. இதனையடுத்து நேற்று ஸ்ரீநகரில் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு மெகபூபா முப்தியுடன் குல்ஷன் நசீர் சென்றார். இந்நிலையில் தனது வயதான தாயாருக்கு அமலாக்கத்துறை அடிக்கடி சம்மன் அனுப்பியதை மெகபூபா முப்தி விமர்சனம் செய்துள்ளார்.
மெகபூபா முப்தி தனது டிவிட்டர் பக்கத்தில், புதிய இந்தியாவில் மத்திய அரசின் பிளவுப்படுத்தும் திட்டம் மற்றும் கொள்கைகளை ஏற்காதவர்களுக்கு, தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் மூலம் சம்மன் அனுப்புவது ஒரு சடங்காக மாறி விட்டது. என் தாயின் விஷயத்தில் தொடர்ச்சியான சம்பவங்கள் வரிசை தெளிவாக உள்ளது. மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) எல்லை நிர்ணய ஆணையத்தை புறக்கணித்தபோது, என் தாய் சம்மன் பெற்றார்.
கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியன்று சட்டவிரோதமாக 370வது சட்டத்தை ரத்து செய்ததை விமர்சித்து அமைதியாக போராட்டம் நடத்தியபோது, என் தாய் சம்மன் பெற்றாள். துரதிர்ஷ்டவசமாக தீவிர வழக்குகளில் வேலை செய்ய வேண்டிய என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் அரசியல் எதிரிகளை துன்புறுத்தவும், தண்டிக்கவும் ஆயுதம் ஏந்தியுள்ளன என்று பதிவு செய்து உள்ளார்.