`தமிழ்நாட்டு மணமகன்கள்; கேரள மணமகள்கள்!’ – சோதனை சாவடியில் அரங்கேறிய 3 திருமணங்கள்
கொரோனா பாதிப்பு காரணமாக திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக- கேரள எல்லைபகுதியில் அமைந்துள்ள சின்னாறு சோதனைச் சாவடி அருகே இன்று மூன்று திருமணங்கள் நடைபெற்றன. மணமக்களின் பெற்றோர்கள் தவிர வேறு யாரும் பங்கேற்கவில்லை.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை ஜுன் 30ம் தேதி வரை அமல்படுத்தியுள்ளது தமிழக அரசு. இந்த நிலையில், பிற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாவட்ட எல்லைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால், யாரும் மாவட்டங்களைக் கடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் மாநிலங்களின் எல்லைகளும் மூடப்பட்டு விட்டது.
இந்த நிலையில், கேரள மாநிலம் காந்தலூர் பகுதியைச் சேர்ந்த சுகன்யா என்பவருக்கும் உடுமலை அருகே உள்ள குறிச்சிக்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும், காந்தலூர் மிஷன் வயல் பகுதியைச் சேர்ந்த வேதகனி என்பவருக்கும் அமராவதி நகர் பகுதியைச் சார்ந்த முத்தப்ப ராஜா என்பவருக்கும், மூணாறைச் சேர்ந்த கஸ்தூரி என்ற மணமகளுக்கும் சென்னையைச் சேர்ந்த நிர்மல் ராஜ் என்ற மணமகனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்தது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் திருமணத்தை நடத்த முடியாமல் பெற்றோர்கள் தவித்து வந்தனர்.
இந்த நிலையில், மாநில எல்லையில் வைத்து திருமணத்தை நடத்த முடிவு செய்த பெற்றோர்கள் கேரள மாநில சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையை நாடியுள்ளனர். அவர்கள் சோதனைச் சாவடியில் வைத்து திருமணம் நடத்தி வைக்க ஏற்பாடு செய்ய முன்வந்ததால், தமிழகத்திலிருந்து மாப்பிள்ளைகளை மாநில எல்லைப் பகுதியான உடுமலையிலிருந்து கேரள மாநிலம் மூணார் செல்லும் சாலையிலுள்ள சின்னார் சோதனைச் சாவடிக்கு வரவழைத்தனர். கேரள அரசு மணப்பெண்ணுக்கு மட்டுமே அனுமதி அளித்ததால் உறவினர் யாராலும் திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. அங்கு வைத்து திருமணத்தை முடித்து வைக்கப்பட்டு மணமகளை மணமகனுடன் அனுப்பி வைத்துள்ளனர். இப்படி இன்று மூன்று திருமணங்கள் இன்று நடந்து முடிந்துவிட்டது.