தோல் நோய்களைக் குணப்படுத்தும் மரிக்கொழுந்து!

 

தோல் நோய்களைக் குணப்படுத்தும் மரிக்கொழுந்து!

`மதுர மரிக்கொழுந்து வாசம் – என் ராசாத்தி உன்னுடைய நேசம்…’ இளையராஜா இசையில் உருவான இந்தப் பாடல் சில ஆண்டுகளுக்குமுன் பட்டிதொட்டியெங்கும் பிரபலம். அடுத்துவந்த நாட்களில், சின்னப்பொண்ணு குரலில் வெளிவந்த `மரிக்கொழுந்தே என் மல்லிகை பூவே…. மாமன் மவ பிடிக்கலையா சொல்லு சொல்லு’ என்ற பாடலும் எல்லோரையும் கட்டிப்போட்டது. மரிக்கொழுந்தை முன்னிறுத்தி இந்தப் பாடல்கள் பாடப்பட்டன. அந்த மரிக்கொழுந்து மணம் வீசும் என்பது மட்டுமே தெரியும்; அதற்குள்ள மருத்துவக் குணம் பற்றி நம்மில் பலருக்குத் தெரியாது. இதோ… இந்தக் கட்டுரையில் மரிக்கொழுந்தின் மகத்துவம் பற்றி மூலிகை ஆராய்ச்சியாளர் தமிழ்க்குமரன் சொல்வதைக் கேட்போம்.

தோல் நோய்களைக் குணப்படுத்தும் மரிக்கொழுந்து!
தவனம்:
மரிக்கொழுந்தை மருக்கொழுந்து என்றும் சொல்லலாம். `மரு – தவனம்’ என்று கேட்டால் தமிழகத்தில் உள்ள பூக்கடைகளில் கிடைக்கும். நறுமணம் வீசும் இந்த மரிக்கொழுந்து இலைகளுக்கு நிறைய மருத்துவக்குணங்கள் உள்ளன. மெல்லிய நறுமணம் வீசும் இந்த மரிக்கொழுந்து இலைகள் மனதை அமைதிப்படுத்தி தூக்கத்தைக் கொடுக்கும். மரிக்கொழுந்து இலைகளை சில தைலங்களுடன் சேர்த்துக் காய்ச்சி தலைக்குக் குளிப்பதால் பல்வேறு நோய்களைத் தீர்க்கும் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. இப்படிக் குளிப்பதால் உடல் வலி, அசதி நீங்கும். சீனர்கள் மரிக்கொழுந்து இலைகளைக் கசாயம் செய்து குடிப்பார்கள்.
இவற்றின் அடிப்படையில் அமெரிக்காவில் மரிக்கொழுந்து இலைகளில் என்ன மருத்துவக்குணம் இருக்கிறது என்பது தொடர்பாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவில் மலேரியா காய்ச்சலைக் குணப்படுத்தும் சக்தி இருப்பதைக் கண்டறிந்தனர். மரிக்கொழுந்தின் இலை மற்றும் பூக்களில் மட்டுமே மருத்துவக் குணங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தோல் நோய்களைக் குணப்படுத்தும் மரிக்கொழுந்து!
தோல் நோய்:
மரிக்கொழுந்து வயிற்றுவலி, தோல் அரிப்பு, தடிப்பு போன்றவற்றைச் சரி செய்யும். அதற்கான மருந்தை மிக எளிதாக நாமே செய்யலாம். மரிக்கொழுந்து இலையை மையாக அரைத்து ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 100 மில்லி நீர் விட்டு சுமார் அரை மணி நேரம் ஊற வைத்து வடிகட்ட வேண்டும். வடிகட்டிய தெளிந்த நீரை குடித்தால் வயிற்றுவலி உடனே சரியாகும்.
தோல் நோய் பிரச்சினை இருப்பவர்கள் இதை தினமும் குடிப்பதுடன் பிரச்சினை உள்ள இடங்களில் அரைத்துப் பூசி வந்தாலும் குணமாகும். சொரியாசிஸ் எனப்படும் ஆபத்தான தோல் நோய்கூட குணமாகும். சிறுநீர் கழிக்கும்போது வலி எடுப்பது, வயிற்றுக்கடுப்பு நோய்களைப் போக்கவும் இது பயன்படுகிறது.

மூட்டு வலி:
மூட்டு வலி உள்ளவர்கள் இதை அரைத்து மேல்பூச்சாக பற்று போடலாம். வீக்கம், வலிகளைப் போக்கவும் இதை பற்று போடலாம். தூக்கம் வராமல் தவிப்பவர்கள் தலையணையின் அடியில் மரிக்கொழுந்து இலைகளை வைத்துத் தூங்கினால் நிம்மதியான தூக்கம் வரும்.