தமிழ்நாட்டிற்கு கொரோனா நிதி வழங்கிய மணிப்பூர் நீதிபதி!
கொரோனா தடுப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தும் வகையில் கொரோனா நிவாரண நிதி திட்டத்தை உருவாக்கியுள்ளது தமிழ்நாடு அரசு. இந்த முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் பொதுமக்களின் பங்களிப்பை வழங்கும்படி அரசு கோரிக்கை விடுத்துள்ள்ளது. கடந்த வருடம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இந்த வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் பெரிதாக எந்த வரவேற்பும் இல்லை. ஆனால் இம்முறை ஏராளமானோர் நிதியளித்து வருகின்றனர்.
குறிப்பாக யார் யாரெல்லாம் நிதி கொடுத்தார்கள், அந்த நிதி எப்படி செலவு செய்யப்பட்டது என்பதைப் பொதுவெளியில் காட்டப்படும் என்று அரசு உறுதியளித்ததே இப்போதைய வரவேற்புக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் நடிகர் சிவகுமார், அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகிய மூவரும் 1 கோடி ரூபாய் காசோலையை ஸ்டாலினிடம் வழங்கினார்கள். இதேபோல பல்வேறு பிரபலங்களும் பொதுமக்களும் நிதி செலுத்தி வருகின்றனர்.
இச்சூழலில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட நீதிபதி எம்.வி. முரளிதரன் நிதியளித்திருக்கிறார். இவர் மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகச் செயல்பட்டு வருகிறார். தனது பங்களிப்பாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறார். தற்போது அவர் மணிப்பூரில் இருப்பதால் காசோலையை தனது மனைவி, மகன் மூலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.