சமரச பேச்சுவார்த்தைக்கு சென்ற முன்னாள் அமைச்சர் மணிகண்டன்?
நடிகை பாலியல் புகார் அளிப்பதற்கு முன்பு நடிகை தரப்பு வழக்கறிஞரின் அலுவலகத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் மணிகண்டன், சமரசம் பேசியதாக சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகாரில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை, கட்டாயப்படுத்தி கருகலைப்பு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், தன் மீதான பாலியல் புகார் குறித்து விளக்கமளித்த மணிகண்டன், புகார் கூறிய நடிகை யார் என்றே தனக்கு தெரியாது எனவும், நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சித்தரிக்கப்பட்டவை எனவும் கூறியிருந்தார். தன்னை மிரட்டி பணம் பறிக்க முயற்சிக்கும் கும்பலோடு நடிகை செயல்படுவதாகவும், அவரது வழக்கறிஞர் தன்னிடம் பணம் கேட்டதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கூறியிருந்தார்.
இந்த நிலையில், நடிகையின் வழக்கறிஞர் சுதன், பணம் கேட்டு மிரட்டியதாகவும், பணம் பறிக்கும் கும்பல் என தன் மீது அவதூறு பரப்பியிருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நடிகை சட்ட நடவடிக்கைக்கு செல்வது தெரிந்து அதை தடுத்து நிறுத்த நடிகையின் வழக்கறிஞர் அலுவலகத்திற்கு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வந்து செல்லும் சிசிடிவியை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கடந்த மாதம் 23-ந் தேதி ஞாயிற்று கிழமையான முழு ஊரடங்கு அன்று, மணிகண்டன் ராமநாதபுரத்தில் இருந்து சென்னை வந்து நடிகையின் வழக்கறிஞரை சந்தித்துள்ளார். அதன் சிசிடிவி தற்போது வெளியாகியுள்ளது. புகார் அளிக்காமல் சமரசமாக செல்வதற்காக தான் மணிகண்டன் தனது உதவியாளர்களுடன் நடிகையின் வழக்கறிஞரை சந்தித்தார் எனவும் நடிகை தரப்பில் குற்றம்சாட்டியுள்ளனர்.
புகார் அளித்த நடிகையை தனக்கு யாரென்று தெரியாது என கூறிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன், புகார் கொடுப்பதற்கு முன்பு ஏன் நடிகை தரப்பு வழக்கறிஞரை நேரில் சென்று சந்தித்தார் என கேள்வி எழுந்துள்ளது.