அண்டை வீட்டாருடனான தகராறில் தீக்குளித்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

 

அண்டை வீட்டாருடனான தகராறில் தீக்குளித்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கன்னியாகுமரி

நாகர்கோயில் அருகே முன்விரோதம் காரணமாக அண்டை வீட்டார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு, தன்னையும் கொளுத்திக் கொண்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (40). இவருக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் சதீஷ் (40) மற்றும் வெங்கடேஷ் (40) ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு ராஜசேகருக்கும் – சதீஷ் மற்றும் வெங்கடேஷ் ஆகியோருக்கு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜசேகர், தனது வீட்டில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்துவந்து இருவர் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

அண்டை வீட்டாருடனான தகராறில் தீக்குளித்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மேலும், அவர் தன் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் 3 பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்ட நிலையில், அவர்களை உறவினர்கள் மீட்டு நாகர்கோயில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உடலில் 90 சதவீதம் தீக்காயம் அடைந்த ராஜசேகருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சதீஷ் மற்றும் வெங்கடேஷ் ஆகியோருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து நாகர்கோயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.