குழந்தைக்கு உடல்நலக்குறைவு : விரக்தியில் தொழிலாளி குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை!
நாகர்கோவில் அருகே குழந்தைகளை கொலை செய்த தொழிலாளி ஒருவர் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இருக்கும் சுண்டபற்றிவிளை பகுதியை சேர்ந்த தம்பதி கண்ணன்(43) – சரஸ்வதி (37). இவர்களுக்கு அனுஷ்கா (10), விகாஷ் (4) என்ற இரண்டு பிள்ளைகள் இருந்தனர். விகாஷுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தச்சு வேலை செய்யும் தொழிலாளியான கண்ணன், விகாஷை குணப்படுத்த பெருமளவு பணத்தை செலவழித்திருக்கிறார். ஆனாலும், விகாஷ் குணமாகவில்லையாம்.
விகாஷின் மருத்துவ செலவிற்காக பல இடங்களில் கடன் வாங்கிய கண்ணன், மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்த நிலையில் மகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் விரக்தி அடைந்த கண்ணன், குழந்தைகள் இருவருக்கும் விஷம் கொடுத்துவிட்டு தனது மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று காலை வெகுநேரம் ஆகியும் கண்ணன் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் குழப்பமடைந்த பொதுமக்கள் கதவை உடைத்து பார்த்துள்ளனர்.
அப்போது கண்ணன் சரஸ்வதியுடன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த ஈத்தா மொழி போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.