தனியார் பள்ளி ஆன்லைன் வகுப்பில் ஆபாச செய்தி அனுப்பிய நபர் கைது!

 

தனியார் பள்ளி ஆன்லைன் வகுப்பில் ஆபாச செய்தி அனுப்பிய நபர் கைது!

திருவாரூர்

மன்னார்குடியில் தனியார் பள்ளி மாணவிகளுக்கு, ஆன்லைன் வகுப்பின்போது ஆபாச செய்திகள் அனுப்பிய கிருஷ்ணகிரியை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. பொதுமுடக்கம் காரணமாக பள்ளி திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அங்கு 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அந்த ஆன்லைன் குழுவில் மாணவி பெயரில் இணைந்த மர்மநபர் ஒருவர், மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் ஆபாச செய்திகளையும், படங்களையும் தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார். இதுகுறித்து மாணவிகள் அளித்த புகாரின் பேரில் அந்த நபரை குழுவில் இருந்து நீக்கிய பள்ளி நிர்வாகம், இதுறித்து கடந்த 29ஆம் தேதி மாவட்ட எஸ்.பி., சீனிவாசனிடம் புகார் அளிதது.

தனியார் பள்ளி ஆன்லைன் வகுப்பில் ஆபாச செய்தி அனுப்பிய நபர் கைது!

புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஆபாச செய்திகள் அனுப்பிய மர்மநபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் அந்த நபர் கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி பகுதியை சேர்ந்த மோகன்குமார்(26) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, கிருஷண்கிரிக்கு விரைந்து சென்ற போலீசார், நேற்று மோகன்குமாரை கைதுசெய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

இதனிடையே, பள்ளி ஆன்லைன் வகுப்புகளில் அத்துமீறி நுழைபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள மாவட்ட எஸ்.பி., ஶ்ரீனிவாசன், ஆன்லைன் வகுப்புகளின்போது, முறையாக தணிக்கை செய்து வகுப்புகளை நடத்த வேண்டுமென பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி உள்ளார்..