சிறுமியை கடத்தி திருமணம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது!
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் பிளஸ் 2 மாணவியை கடத்தி திருமணம் செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைதுசெய்தனர்.
மயிலாடுதுறை நகரில் உள்ள சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். இந்த நிலையில், பாலச்சந்திரனுக்கு, மயிலாடுதுறை பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் 17 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. நாளடைவில் இது காதலாக மாறி உள்ளது.
இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் சிறுமியுடன் பாலச்சந்திரன் மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த பாலச்சந்திரன் மற்றும் சிறுமியை மடக்கிப்பிடித்த போலீசார், பின்னர் சிறுமியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், பாலச்சந்திரன் சிறுமியை திருமணம் செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.