சென்னை போலீசுக்கு புதிய கமிஷனர்… யார் இந்த மகேஷ் குமார் அகர்வால்?

 

சென்னை போலீசுக்கு புதிய கமிஷனர்… யார் இந்த மகேஷ் குமார் அகர்வால்?

சென்னை பெருநகர காவல்துறை கமிஷனராக மகேஷ் குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்றார். அவருக்கு போலீசாஸ் அதிகாரிகள், பொது மக்கள் வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்.
1994-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ் குமார் அகர்வாலின் சொந்த மாநிலம் பஞ்சாப். இவர் பி.ஏ மற்றும் சட்டம் பயின்றவர். தமிழ், ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளில் புலமை வாய்ந்தவர். தேனியில் எஸ்பியாக பணியைத் தொடங்கிய மகேஷ்குமார் அகர்வால் சென்னை பூக்கடை காவல்துறை துணை ஆணையராக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். அதன் பின்னர் சென்னை போக்குவரத்து போலீஸ் துணை ஆணையர், தூத்துக்குடி எஸ்பி போன்ற முக்கிய பதவிகளை வகித்தார்.

சென்னை போலீசுக்கு புதிய கமிஷனர்… யார் இந்த மகேஷ் குமார் அகர்வால்?மத்திய அரசுப் பணிக்கு சென்ற போது சி.பி.ஐ-யில் ஏழு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பஞ்சாப், ஹரியானா மற்றும் இமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நடந்த முக்கிய வழக்குகளை புலனாய்வு செய்து அனுபவம் பெற்றவர். இதனையடுத்து தமிழக காவல்துறைக்கு திரும்பிய அவர் சிபிசிஐடி டிஐஜி, சென்னை நகர போலீஸ் கூடுதல் கமிஷனர் (தெற்கு), மதுரை போலீஸ் கமிஷனர், மீண்டும் சிபிசிஐடி, ஐஜி உள்ளிட்ட முக்கியப் பதவிகளை வகித்தார். குறிப்பாக சென்னை நகர கூடுதல் கமிஷனராக இருந்த அகர்வால் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த விஸ்வநாதனின் கனவுத்திட்டமான சிசிடிவி கேமராக்களை சென்னை நகர் முழுக்க நிறுவும் திட்டத்திற்கு துணையாக செயல்பட்டார்.

சென்னை போலீசுக்கு புதிய கமிஷனர்… யார் இந்த மகேஷ் குமார் அகர்வால்?சென்னை பூக்கடை துணைக் கமிஷனராக இருந்த போது “நைட் கிரைம் டு ஜீரோ” என்ற திட்டத்தை காவல்துறையில் அறிமுகப்படுத்தி இரவு ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தினார். இதன் மூலம் வடசென்னையில் குற்றங்கள் வெகுவாக குறைந்தன. மேலும் போக்குவரத்துப் பிரிவில் இருந்த போது சென்னை நகரில் முக்கிய சந்திப்புகளில் விபத்துக்கள் கணிசமாக குறைய வழிவகுத்தார்.
சிபிசிஐடி ஐஜியாக இருந்த போது சேலம் ரயில் கொள்ளை வழக்கு தொடர்பாக புலனாய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று ஆபரேஷன்ஸ் பிரிவில் பணியமர்த்தப்பட்டார். சேலம் ரயில் கொள்ளை வழக்கில் கொள்ளையர்களைக் கைது செய்தது, இந்து தலைவர்கள் படுகொலை வழக்கில் 3 தீவிரவாதிகளை கைது செய்தது, சிறுசேரி பெண் பொறியாளர் கொலை வழக்கில் கொலையாளிகளைக் கைது செய்தது, சென்ட்ரல் குண்டுவெடிப்பு வழக்கில் தீவிரவாதிகளை கைது செய்தது, வேளாண் அதிகாரி முத்து குமாரசாமி தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தது, தி.மு.க-வின் பொட்டு சுரேஷ் கொலை வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுத்தது என உள்பட முக்கிய வழக்குகளை திறம்படக் கையாண்டு நன்மதிப்பைப் பெற்றவர். சிறப்பான பணிக்காக முதல்வரிடம் பதக்கமும் பெற்றுள்ளார். சென்னை மாநகர கமிஷனராக பொறுப்பேற்றிருக்கும் அவருக்கு டாப் தமிழ் நியூஸ் சார்பில் வாழ்த்துக்கள்!