மதுரை: 141 கிலோ கஞ்சா பதுக்கி விற்பனை செய்த மூவர் கைது!
மதுரையில் 141 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த மூன்று பேரை திருமங்கலம் அருகே போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் தொடர்பாக அவ்வப்போது செய்திகள் வெளியாவது வழக்கம். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஐந்து, பத்து கிலோ கஞ்சா சிக்கியது என்று செய்தி வரும்… ஆனால் மதுரையில் 141 கிலோ கஞ்சா சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனை ஜோராக நடைபெறுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் ரோந்து பணியைத் தீவிரப்படுத்த மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் உத்தரவிட்டார். மேலும் தனிப்படையும் அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை போலீசார் தேடி வந்தனர்.
நேற்று மாலை திருமங்கலம் – உசிலம்பட்டி சாலையில் போலீசார் வாகனத் தனிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முன்னுக்குப் பின் முரணான தகவல் அளிக்கவே போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் வாகனம் மற்றும் கையை சோதனை செய்தபோது 6.5 கிலோ கஞ்சா மற்றும் ரூ.80 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கைப்பற்றினர்.
அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன், பொன்னாங்கன் என்பதும் கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது. மேலும், திருமங்கலம் அசோக்நகரில் வசிக்கும் விஜயன் என்பவரிடம் இருந்து கஞ்சா வாங்கிச் செல்வதாகவும் கூறியுள்ளனர். இதன் அடிப்படையில் அசோக் நகரில் உள்ள விஜயன் வீட்டை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 135 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விஜயன் திருமங்கலத்தில் மளிகை, காய்கறி போன்ற பொருட்கள் மொத்த விற்பனையில் ஈடுபட்டு வந்ததும், கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது. ஆந்திராவிலிருந்து மொத்தமாக கஞ்சாவைக் கடத்திவந்து வீட்டில் வைத்து சில்லறையாக விற்பனை செய்து வந்ததாக கூறியுள்ளார். அவர் மீது கஞ்சா விற்பனை வழக்கு தொடர்ந்த போலீசார், விஜயனுக்கு ஆதரவாக இருந்த கிருஷ்ணன் என்பவரையும் தேடி வருகின்றனர்.