‘பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில்… தமிழகம் பரவாயில்லை’!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுள் தமிழகமும் ஒன்று. இங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், அரசின் அறிவிறுத்தலின் பேரில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் விளைவாக, தமிழகத்தில் பாதிப்பு அதிகமாக இருந்தாலும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
ஆனால் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நிலைமை மிக மோசமாக உள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி இருப்பதால் நோயாளிகள் மருத்துவமனை வாசல்களில் காத்துக் கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், நாளொன்றுக்கு நூற்றுக் கணக்கானோர் உயிரிழப்பதால் உடல்களை எரிப்பதற்கு மாயனங்களில் டோக்கன் போட வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. இதனிடையே, ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் வடமாநிலங்கள் திண்டாடிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் இது போன்ற நிலை வராத வண்ணம் தடுக்க பல நடவடிக்கைகளை சுகாதாரத்துறை முடுக்கி விட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் பொதுமக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்த உத்தரவிடக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடர்ந்த வழக்கு ஒன்று இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 60 வயது, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பல கட்டங்களாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகத்தின் நிலை பரவாயில்லை என கருத்து தெரிவித்தனர்.