கவர்னர் ஆனந்திபென் படேலுக்காக பரிதாபப்படுகிறேன் என்ற கமல் நாத்… மன்னிப்பு கேட்கக்கோரிய பா.ஜ.க. அமைச்சர்
மத்திய பிரதேச சட்டப்பேரவையில் கவர்னர் ஆனந்திபென் படேல் பேசிய பிறகு, அவருக்காக பரிதாபப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் கமல் நாத் கூறினார். இதனையடுத்து கமல் நாத் மன்னிப்பு கேட்க வேண்டும் பா.ஜ.க. அமைச்சர் வலியுறுத்தினார்.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் கவர்னர் உரையாற்றுவார். அதன்படி அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று கவர்னர் ஆனந்தி பென் படேல் உரையாற்றினார். கவர்னர் ஆனந்தி பென் படேல் உரையாற்றிய பிறகு, சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் கமல் நாத் பேசினார்.
கமல் நாத் பேசுகையில், கவர்னர் ஆனந்திபென் படேலுக்கு நான் பரிதாபப்படுகிறேன். மாநிலத்துக்காக அல்ல ஊடகங்களுக்காகன அந்த உரையை ஆற்றினார். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உண்மையான நிலைமை மற்றும் பெண்கள் மீதான அட்டூழியங்கள் குறித்து கூறப்படவில்லை என்று தெரிவித்தார். கவர்னருக்காக பரிதாபப்படுகிறேன் என்று கூறியதற்கு கமல் நாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க. அமைச்சர் வலியுறுத்தினார்.
மாநில அமைச்சர் விஷ்வாஸ் சாரங் இது தொடர்பாக பேசுகையில், அவர் (கமல் நாத்) கவர்னருக்காக பரிதாபப்படுவதாக கூறினார். அவர் உடனடியாக விளக்கம் மற்றும் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் கவர்னர் பதவியை அவமதிப்பு செய்து விட்டார். அத்தகைய அந்தஸ்துள்ள தலைவரிடமிருந்து இத்தகைய கருத்துக்களை எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்தார். கவர்னர் ஆனந்திபென் படேல் தனது உரையில், கோவிட்-19 தொற்றுநோயின் பாதகமான நிலை மற்றும் அரசின் கருவூலமும் காலியாக இருந்த சூழ்நிலையில் மத்திய பிரதேச அரசு (பா.ஜ.க. அரசு) அமைந்தது. ஆனால் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பாராட்டத்தக்க ஒரு வேலையை செய்தது. சுகாதார வசதிகளை மேம்படுத்துவது முதல் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுவது வரை அனைத்து பொறுப்புகளையும் மாநில அரசு சிறப்பாக கையாண்டது என்று தெரிவித்தார்.