மின் கட்டணத்தை அதிரடியாக குறைத்த மத்திய பிரதேச அரசு… முன்பு ரூ.100 செலுத்தி இருந்தால் இனி 50 ரூபாய்தான்
நாடே கொரோனா வைரஸ் நெருக்கடியால் சிக்கி தவிக்கும் வேளையில், மத்திய பிரதேச மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அம்மாநில அரசு மாதந்திர மின் கட்டணத்தை அதிரடியாக குறைத்துள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அம்மாநிலத்தில் உள்ள குறைந்த வருவாய் மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு பெரிய ஆறுதலாக இருக்கும்.
மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் நடந்த கருத்தரங்கில் அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் மாநிலத்தில் மின் கட்டணம் குறைக்கப்பட்டது தொடர்பான அறிவிப்பை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.100 வரை மின் கட்டணம் செலுத்தியவர்கள், மே முதல் ஜூலை வரை மாதந்திர மின்கட்டணமாக ரூ.50 செலுத்தினால் போதும்.
மேலும் ரூ.100 முதல் ரூ.400 வரை மின்கட்டணம் செலுத்தியவர்களிடம் ரூ.100 மட்டுமே வசூலிக்கப்படும். அதேசமயம் ரூ.400க்கு அதிகமாக மின் கட்டண செலுத்தியவர்கள் பாதி தொகையை செலுத்தினால் போதும். அரசின் இந்த நடவடிக்கையால் சுமார் 56 லட்சம் மின்சார பயன்பாட்டாளர்கள் ரூ.50 மட்டுமே மின் கட்டணமாக செலுத்துவார்கள் மற்றும் ரூ.255 கோடி வரை பலன் பெறுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.