சிறுமலையில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து – 9 பேர் படுகாயம்
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகேயுள்ள முடக்குப்பட்டியை சேர்ந்தவர் ராமர். சரக்கு வாகன ஓட்டுநர். இவர் இன்று மாலை சிறுமலையில் இருந்து காய்கறி பாரம் ஏற்றிக் கொண்டு திண்டுக்கல்லுக்கு திரும்பி கொண்டிருந்தார். வாகனத்தில் சிறுமலையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் பயணம் செய்தனர்.
இந்த நிலையில், சிறுமலை மலைப்பாதையில் இறங்கி கொண்டிருந்தபோது முதலாவது கொண்டை ஊசி வளைவு அருகே ராமரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில், ஓட்டுநர் ராமர் உள்ளிட்ட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், பொக்லைன் இயந்திரம் மூலம் வாகனத்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.