பட்டாக்கத்தியில் கேக் வெட்டிக் கொண்டாடிய வழக்கறிஞர்.. சோஷியல் மீடியாக்களில் வைரல் ஆன வீடியோவால் பரபரப்பு!
சமீப காலமாக பட்டாக்கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது வாடிக்கையாகி விட்டது. பல புள்ளிங்கோக்கள் பட்டா கத்தியால் கேக் வெட்டியதால் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்தது. இந்நிலையில் வழக்கறிஞர் ஒருவர் பட்டா கத்தியால் கேக் வெட்டிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 8 ஆம் தேதி விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரபு என்பவர், தனது நண்பர்களுடன் பட்டா கத்தியால் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அந்த வீடியோவை அவரது நண்பர்கள் சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்ய, அந்த வீடியோ வைரல் ஆனது.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பினும், அதனை மீறி ஆயுதத்துடன் 10க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி பிறந்தநாளை கொண்டாடியது நோய் பரவ வழி வகுக்கும் என்பதால் விழுப்புரம் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து வழக்கறிஞர் பிரபு மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அதில் 5 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.