கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை, மகன் உயிரிழப்பு: களத்தில் இறங்கிய பெண் நீதிபதி
கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை, மகன் உயிரிழந்தது குறித்து தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா நேரில் விசாரணை நடத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் சில நாட்களுக்கு முன்பு தனது செல்போன் கடையை கூடுதலாக 5 நிமிடம் திறந்து வைத்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடுமையாக தாக்கிய சாத்தான்குளம் போலீஸார், சிறையில் அடைத்தனர். ஆனால் அடுத்த சில மணி நேரத்தில் தந்தை, மகன் இறந்துவிட்டனர். இந்த சம்பவம் சாத்தான்குளம் மட்டுமின்றி இந்திய அளவில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் பலர் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தந்தை, மகன் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும், அவர்களது மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என தமிழகம் முழுவதுமுள்ள வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான் குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் உயிரிழப்பு விவகாரம் குறித்து கோவில்பட்டி கிளைச் சிறையில் தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா விசாரணை நடத்தினார். ஏற்கனவே நீதிபதி பாரதிதாசன் விசாரணை நடத்திய நிலையில் தற்போது பெண் நீதிபதி ஹேமா விசாரணை நடத்தினார்.