அமெரிக்காவின் முக்கிய மாகாணத்தில் லாக்டெளன்! மிரட்டும் கொரோனா
கொரோனாவின் பிடியில் உலகமே தவிக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. ஏனெனில், ஒவ்வொரு நாளும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 5 கோடியே 72 லட்சத்து 36 ஆயிரத்து 335 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 97 லட்சத்து 22 ஆயிரத்து 802 நபர்கள்.
கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 13 லட்சத்து 65 ஆயிரத்து 634 பேர். நேற்று மட்டுமே 10,758 பேர் உலகளவில் கொரோனாவால் இறந்திருக்கிறார்கள். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,16,47,899 பேர்.
கொரோனா பரவத் தொடங்கிய நாளிலிருந்தே அமெரிக்காவில் கொரோனாவின் பரவல் மிக அதிகம். இதுவரை அமெரிக்காவில் 1,20,70,712 பேரும், இந்தியாவில் 90,04,365 பேரும், பிரேசில் நாட்டில் 59,83,089 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நேற்று மட்டுமே அமெரிக்காவில் 1.92,186 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ், கலிபோர்னியா, ப்ளோரிடா ஆகிய மாகாணங்களே அதிக கொரோனா நோயாளிகள் உள்ளவை ஆகும். ஆனால், தற்போது அதிவேகமாக கலிபோர்னியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இதுவரை கலிபோர்னியாவில் 10 லட்சத்து 80 ஆயிரத்து 261 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இவர்களில் 18 ஆயிரத்து 565 பேர் இறந்திருக்கிறார்கள்.
அதிகரித்து வரும் கொரோனா பரவலால் கலிபோர்னியாவில் சனிக்கிழமை முதல் ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கிறது. இதேநிலை இன்னும் சில மாகாணங்களுக்கு நீடிக்கப்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.