குன்றத்தூர் பெண் தாசில்தாருக்கு கொரோனா உறுதி.. அலுவலகம் மூடல்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்த வைரஸ் இப்படியே நீடித்தால் ஜூலை மாத இறுதிக்குள் தமிழகத்தில் 2 லட்சம் பேர் பாதிப்பார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், கடந்த மாதம் 18 ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் சுழற்சி முறையில் 50% ஊழியர்களுடன் இயங்கத் தொடங்கியது. அதனால் சென்னை தலைமை செயலகம் உட்பட பல அலுவலகங்களில் அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரவியிருக்கிறது. அதன் காரணமாக தற்போது பணிபுரியும் ஊழியர்களுக்கு தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரின் பெண் தாசில்தாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், தாசில்தார் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதை போல, குன்றத்தூர் தாசில்தாருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூரில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.