வசந்தகுமார் உடல் பொதுமக்கள் பார்வைக்காக நாளை சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்படும்: கே.எஸ்.அழகிரி

 

வசந்தகுமார் உடல் பொதுமக்கள் பார்வைக்காக நாளை சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்படும்: கே.எஸ்.அழகிரி

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார். அவருக்கு வயது 70. ஆகஸ்ட் 10 ஆம் தேதி கொரோனா உறுதியானதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இரவு 7 மணியளவில் எம்.பி. வசந்தகுமார் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அவரது மறைவிற்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வசந்தகுமார் உடல் பொதுமக்கள் பார்வைக்காக நாளை சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்படும்: கே.எஸ்.அழகிரி

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான திரு எச்.வசந்தகுமார் அவர்கள் காலமான செய்தி கேட்டு கடும் அதிர்ச்சிக்கும், துயரத்திற்கும் ஆளாகியிருக்கிறேன். மறைந்த திரு எச்.வசந்தகுமார் அவர்களின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக நாளை (29.08.2020) சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, சத்தியமூர்த்தி பவன் முகப்பில் வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நடுத்தரக் குடும்பங்களின் வலியறிந்து, வியாபாரத்தை வளர்த்தவர். தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றியிருந்தோரையும் முன்னேற்றியவர். அரசியலிலும் கறை படியாது வாழ்ந்து, மறைந்த திரு. வசந்தகுமார் அவர்களின் மறைவு தமிழகத்திற்கே இழப்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.