அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்… மோடி அரசை விளாசிய கே.எஸ்.அழகிரி!
பெகாசஸ் மென்பொருளை வைத்து தலைவர்களை வேவு பார்த்த மோடி அரசு பதவி விலக வேண்டுமென கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
மத்திய அரசு பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி ராகுல்காந்தி உள்ளிட்ட 300 தலைவர்களின் செல்போன்களை வேவு பார்த்ததாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் நேரடியாக குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு விரைவில் விசாரிக்கப்பட உள்ள நிலையில், இன்று காங்கிரஸ் தலைமையில் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசை கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர் மாளிகையை காங்கிரசார் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நூற்றுக் கணக்கான காங்கிரசார் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தினர். அப்போது, தலைவர்களை வேவுபார்த்த மத்திய அரசு ராஜினாமா செய்ய வேண்டுமென முழக்கங்களை எழுப்பினர். அந்த பேரணி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, உளவு பார்க்க அனுமதித்ததன் மூலம் ஜனநாயகத்தின் அடிப்படையையே மோடி அரசு தகர்த்து விட்டது என குற்றஞ்சாட்டினார். இந்த குற்றத்திற்காக மோடி தலைமையிலான அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.