கர்ம வினைகளை நீக்கும் கிருத்திகை விரதம்!

 

கர்ம வினைகளை நீக்கும் கிருத்திகை விரதம்!

மாமனாரை வழிபடும் மாதமான புரட்டாசியில் மருமகனை பாலூட்டி சீராட்டி வளர்த்த கார்த்திகை பெண்களின் நட்சத்திரமான கிருத்திகை நட்சத்திரத்தில் முருகப் பெருமானுக்கு விரதமிருந்து வழிபடுவது மிகவும் விஷேஷமானது. தேவர்களை சிறைப்பிடித்து, மக்களை கொடுமைப்படுத்திய சூரனை வதைக்க வேண்டி எம்பெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறுமுகனை வளர்க்கும் பொறுப்பு ஆறு கார்த்திகை பெண்களிடம் கொடுக்கப்பட்டது. கார்த்திகைப் பெண்களும் குமரனை பாலூட்டி போற்றி வளர்த்தார்கள்.

5 Most Famous Tales of Lord Murugan | Astro Ulagam


அவனை சேர்த்து ஒன்றாக்கிய உமையுடன் அங்கே எழுந்தருளிய சிவபிரான், கார்த்திகைப் பெண்களைப் போற்றி வாழ்த்தி இனி கந்தன் இந்தப் பெண்களின் பெயரால் `கார்த்திகேயன்’ எனவும் அழைக்கப்படுவான் என்று கூறி அருளினார். மேலும் அவர்களுக்கு நட்சத்திர பதவியும் அளித்து, இந்த கார்த்திகைப் பெண்களின் நட்சத்திரம் வரும் சமயம் முருகனுக்கு விரதம் இருப்பவர்களுக்கு, அவனருளால் குறைகள் நீங்கி, நல்வாழ்வும், முக்தியும் கிடைக்கும் என்று அருளிச் செய்தார். இது தான் கிருத்திகை அல்லது கார்த்திகை விரதம் என்று அழைக்கப்படுகிறது.


கிருத்திகை விரதமிருப்பவர்கள் அதிகாலை வேளையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு, பூஜை அறையை சுத்தம் செய்து முருகனின் படத்திற்கு முன்பு அரிசி மாவில் அறு கோண கோலம் இட வேண்டும். பின்பு முருகனின் படத்திற்கு இருபுறமும் நெய் தீபமேற்றி, பூக்கள் மற்றும் பழங்களை நிவேதனம் வைத்து உணவு மற்றும் நீரேதும் அருந்தாமல் “கந்த சஷ்டி கவசம்” அல்லது “சண்முக கவசத்தை” மனமொன்றி படிக்க வேண்டும். முடிந்தவர்கள் இந்த தினம் முழுவதும் உணவேதும் உண்ணாமல் வெறும் நீரை மட்டும் அருந்தி விரதம் இருப்பது சிறந்தது. சாப்பிட்டாக வேண்டிய நிலையில் இருப்பவர்கள் இந்நாள் முழுவதும் உப்பு சேர்க்கப்படாத உணவை உண்டு மாலையில் உங்களுக்கு அருகாமையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

கர்ம வினைகளை நீக்கும் கிருத்திகை விரதம்!

கிருத்திகை விரதத்தால் உங்களின் கர்ம வினைகள் நீங்கும். செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் கெடுதலான திசை நடப்பவர்களுக்கு தீமையான பலன்கள் ஏற்படாமல் காக்கும். திருமண தடைகள் அகலும். சொந்த வீடு கனவு நிறைவேறும். மொத்தத்தில் முருகனின் முழுமையான அருள் கிட்டும்.

  • வித்யா ராஜா