கோவில்பட்டி டிஎஸ்பி, நகராட்சி அலுவலருக்கு கொரோனா தொற்று உறுதி!
தூத்துக்குடி
கோவில்பட்டி டிஎஸ்பி மற்றும் நகராட்சி நகரமைப்பு பிரிவு அலுலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி டிஎஸ்பி கலைக்கதிரவன் உடல்நல குறைவால், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்த நிலையில், அவருக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில், கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிஎஸ்பி அலுவலகத்தில் உள்ள அவரது அறை மூடப்பட்டு, அலுவலம் முழுமையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மேலும், டிஎஸ்பியுடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும்படி சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இதேபோல், கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு பிரிவில் பணிபுரியும் அலுவலருக்கும், தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், அந்த பிரிவில் உள்ளவர்களை வெளியேற்றிய சுகாதாரத்துறையினர், அறையை மூடியதுடன் வளாகம் முழுவதுமாக கிருமி நாசினியை தெளித்தனர்.
இதனிடையே, எட்டயபுரம் பகுதியில் 2 ஆசிரியர்கள் உள்பட 6 பேருக்கும், கயாத்தாறு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது, தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.