கோவை
பெரியநாயக்கன் பாளையத்தில் வேட்டைக்காக நாட்டுவெடி குண்டு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில், நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் பிரஸ் காலனி பகுதியில் ஏராளமான நரிக்குறவர் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், பன்றி உள்ளிட்ட விலங்குகளை பிடிப்பதற்காக, அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக நாட்டு வெடிகுண்டு ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், பிரஸ் காலனியை சேர்ந்த பூந்திராய், மணிமாறன், ராமதாஸ் மற்றும் ராஜா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்தது குறித்தும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.