‘அரசு மீதான மக்களின் கோபத்தை திசை திருப்பவே இணையத்தில் திமுக மீது அவதூறு’ – கே.என்.நேரு

 

‘அரசு மீதான மக்களின் கோபத்தை திசை திருப்பவே இணையத்தில் திமுக மீது அவதூறு’ – கே.என்.நேரு

அண்மையில் ஒரு யூடியூப் சேனலில் கடவுள் முருகரைப் பற்றிய ஆபாசமாகச் சித்திரிக்கப்பட்ட வீடியோ வந்தது. அந்த வீடியோ இந்து மத நம்பிக்கையாளர்களின் மனதைப் புண்படுத்துவதாகப் புகார் அளிக்கப்பட்டிருந்தது. காவல் துறை யூடியூப் சேனல் மீது வழக்கும் பதிவு செய்திருக்கிறது. இந்த நிலையில் அந்த யூடியுப் சேனலையும் திமுகவையும் இணைத்து இணையத்தளத்தில் செய்திகள் பரவின. இதற்கு பதில் அளிக்கும் விதமாக திமுகவின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘அரசு மீதான மக்களின் கோபத்தை திசை திருப்பவே இணையத்தில் திமுக மீது அவதூறு’ – கே.என்.நேரு

அந்த அறிக்கையில், ‘சமீப காலமாக இணையதளத்தில் வரும் விமர்சனங்களில், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் எல்லாவற்றிலும் சேர்த்துக் கோர்த்துவிடும் போக்கை ஒரு உத்தியாகச் சிலர் திட்டமிட்டுச் செய்கிறார்கள். ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்றும், ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்றும் சொன்னவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். ‘பகுத்தறிவுப் பிரச்சாரம் நடக்கட்டும். அது ஆன்மீகப் பிரச்சாரத்துக்கு எந்தவகையிலும் இடையூறாக இருக்காது’ என்று வழிகாட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர். இந்த இரண்டு வழிகாட்டும் நெறிமுறைகளின் படியே கழகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் பக்தர்கள் மனம் புண்படும்படி வெளியான ஒரு இணையதளக் காட்சிக்குப் பின்னணியில் தி.மு.க.,வினர் இருப்பது போன்ற தோற்றத்தைச் சில அரசியல் அரைகுறைகள் இணையதளங்களில் பரப்பி வருகிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம் திறந்த புத்தகம்’ என்றார் பேரறிஞர் அண்ணா. இதற்கு ஒளிவுமறைவான நோக்கங்கள் இல்லை. தமிழர் மேம்பாடு ஒன்றே இதன் அடிப்படை நோக்கம். தமிழர்கள் மேம்பாடு அடைந்து முன்னேறிவிடக் கூடாது என்பதற்கு முட்டுக்கட்டை போட நினைப்பவர்கள் காலங்காலமாகச் சொல்லி வந்த அவதூறுகள் இன்றைக்கு மீண்டும் இணையதளங்களில் வாந்தியெடுக்கப்படுகின்றன. இவை அனைத்தும் மக்கள் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன பழைய பல்லவிகள்.

‘அரசு மீதான மக்களின் கோபத்தை திசை திருப்பவே இணையத்தில் திமுக மீது அவதூறு’ – கே.என்.நேரு

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு என்று தனித்த வெளிப்படையான கொள்கைகள் உண்டு.இவை யாருடைய மனதையும் புண்படுத்துவதும் இல்லை. யாருடைய நம்பிக்கைக்கும் எதிரானவர்களும் அல்ல. ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற சமத்துவச் சிந்தனை கொண்ட கொள்கைகள் அவை.

இத்தகைய அவதூறுகளைத் திட்டமிட்டுப் பரப்பும் தீயசக்திகளை இணையதளங்களில் இயங்கும் தி.மு.க. தோழர்கள் அடையாளம் கண்டு ஒதுங்கிச் செல்ல வேண்டும். இவை அனைத்தும் மக்களைத் திசை திருப்புவதற்காகச் செய்யப்படுபவை. கொரோனா பரவலை முன்கூட்டியே தடுக்க முன்யோசனை இல்லாத மத்திய மாநில அரசுகள் மீது மக்களின் கோபம் பாய்ந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த திசை திருப்பும் பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும், பல்லாயிரக்கணக்கில் மக்கள் இறந்தும் போன கொந்தளிப்பு மத்திய, மாநில அரசுகள் மீது திரும்பிவிடக்கூடாது என்பதற்காக இவை செய்யப்படுகின்றன. இந்த தந்திர அரசியலை நம்முடைய தோழர்கள் உணர்ந்து கருத்துக்களைச் சொல்ல வேண்டும். அவர்களைப் புறந்தள்ளுங்கள். தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் முடிந்தால் இவர்கள் அனைவரும் பறந்து காணாமல் போய்விடுவார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.