கரூரில் இளநீர் வியாபாரி வெட்டிக்கொலை
கரூர் சின்ன ஆண்டான்கோவில் மேட்டு தெருவைச் சேர்ந்த குணசேகரன் கரூர் – கோவை சாலையில் இளநீர் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இன்று குணசேகரனும் அவரது மனைவியும் இளநீர் மொத்தமாக வாங்குவதற்கு அதிகாலையில் பொள்ளாச்சி சென்று விட்டனர். இதனால், இளநீர் கடையை குணசேகரன் மகன் கிருஷ்ணமூர்த்தியும் ( 27) இவரது மனைவி ஷஸ்மிதா (23) ஆகிய இருவரும் பார்த்துக் கொண்டனர்.
அப்போது, பைக்கில் வந்த இருவர் இளநீர் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியை மனைவி ஷஸ்மிதா கண் எதிரே தலை மற்றும் கைகளில் வெட்டி விட்டு வந்த வேகத்தில் பைக்கில் தப்பிச் சென்று விட்டனர்.
இதில் ஷஸ்மிதாவின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தின ஓடிவந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த கிருஷ்ணமூர்த்தியை, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.