சாத்தான் குளம் விவகாரம்: பிரேத பரிசோதனைக்கு முன்பே இறப்பின் காரணம் முதல்வருக்கு எப்படி தெரியும்?- கனிமொழி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை – மகன் காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த விவகாரம் பூதாரகரமாக வெடித்துள்ளது. இதையடுத்து அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் போராட்டத்தில் இறங்கினர். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது. மாநில மனித உரிமை ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியது. தந்தை மகன் சடலங்களை மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு பிரேதப் பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, தூத்துக்குடியில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காவல் உதவி ஆய்வாளர்கள் 2 பேர், தலைமைக் காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தகுதிக்கேற்ப ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்” என தெரிவித்தார்.
கோவில்பட்டி சிறையில் தந்தை ஜெயராஜ் உடல்நலக்குறைவு காரணமாகவும், மகன் பென்னிக்ஸ் மூச்சுத் திணறல் காரணமாகவும் உயிரிழந்ததாக முதல்வர் கூறுகிறார். இன்னும் உடற்கூராய்வு முடிய வில்லை. அதற்குள் பழனிசாமி அவர்களுக்கு இறப்பின் காரணம் எப்படி தெரிந்தது? 1/2 #சாத்தான்குளம்
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 24, 2020
இந்நிலையில் திமுக மகளிர் அணித்தலைவர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “வன்முறைதான் உயிரிழப்புக்கு காரணம் என்று தெளிவாகத் தெரிந்தும், உண்மைக்கு புறம்பாக பேசும் முதல்வர் கொலைக்கு காரணமான காவல்துறையினர் மீது எப்படி உரிய நடவடிக்கை எடுப்பார்? கோவில்பட்டி சிறையில் தந்தை ஜெயராஜ் உடல்நலக்குறைவு காரணமாகவும், மகன் பென்னிக்ஸ் மூச்சுத் திணறல் காரணமாகவும் உயிரிழந்ததாக முதல்வர் கூறுகிறார். இன்னும் உடற்கூராய்வு முடிய வில்லை. அதற்குள் பழனிசாமி அவர்களுக்கு இறப்பின் காரணம் எப்படி தெரிந்தது?” எனக் குறிப்பிட்டுள்ளார்.