முன்னாள் ராணுவ வீரரின் மகனை கொன்று, இருசக்கர வாகனம் கொள்ளை
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அருகே முன்னாள் ராணுவ வீரரின் மகனை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்துவிட்டு, இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாவேரிபாக்கம் பஜனைகோயில் தெருவை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் ரவி சாம்சன். இவரது 2-வது மகன் எலிசா(21). பிளஸ் 2 முடித்துவிட்டு தேவாலயங்களில் பாடல்கள் பாடி வருகிறார்.
இந்நிலையில், செம்பரம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று சென்ற எலிசா, தன்னுடைய வீட்டுக்கு சிறுகாவேரிப்பாக்கம் பி.டி.ஓ அலுவலகம் பின்புறம் வழியாக சென்றுள்ளார். அப்போது, அவரை மறித்த 3 மர்மநபர்கள்
இரும்பு ராடால் தலையில் தாக்கி கொலை செய்துவிட்டு, இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாலுசெட்டி சத்திரம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அதேபகுதியை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.