நடிகர் விவேக் விவகாரம்: தடுப்பூசி குறித்த வதந்திகளை பரப்பாதீர்கள்- கமல்ஹாசன்

 

நடிகர் விவேக் விவகாரம்: தடுப்பூசி குறித்த வதந்திகளை பரப்பாதீர்கள்- கமல்ஹாசன்

நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு முன்பே அவரது இதய துடிப்பு குறைவாக இருந்ததாகவும், மருத்துவமனைக்கு அவர் வந்தபோது சுயநினைவு இல்லாமலேயே இருந்தார் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடிகர் விவேக், நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்நிலையில் இன்று மாரடைப்பால் பாதிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் தடுப்பூசிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நடிகர் விவேக் விவகாரம்: தடுப்பூசி குறித்த வதந்திகளை பரப்பாதீர்கள்- கமல்ஹாசன்

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன், “கொரோனா தடுப்பூசி மீதான பொது மக்களின் அச்சம் தீர வேண்டும் என்பதற்காகவே அரசு மருத்துவமனையில் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர் நண்பர் விவேக்.

அவர் விரைவில் நலம் பெற வேண்டுமென விரும்புகிறேன். அவரது உடல் நலக் குறைவுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்தப் பெருந்தொற்று காலத்தில் நாம் தேவையற்ற அச்சம் கொள்வதை, வதந்திகளைப் பரப்புவதை நிறுத்தி விட்டு அரசுடன் ஒத்துழைப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.