பொழுது போகாமல் அரசியலுக்கு வந்தவர் கமல் : அதிமுக அமைச்சர் கடும் தாக்கு!
கமல்ஹாசன் அரசியல்வாதியே கிடையாது என்று அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. இந்த போட்டியில் தானும் சளைத்தவன் அல்ல என்று கமல் ஹாசன் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். செல்லும் இடமெல்லாம் எம்ஜிஆரை துணைக்கு அழைத்து செல்லும் கமல், நான் எம்ஜிஆர் மடியில் வளர்ந்தவன்; அப்பா, ஆசான் என எம்ஜிஆரை சொந்தம் கொண்டாட அனைவரும் உரிமை உண்டு என்று கூறி வரும் கமல், தற்போதைய அரசு ஊழலில் திளைத்துள்ளது. வாய்ப்பு கிடைத்தால் எம்ஜிஆர் வாரிசாக நான் இருப்பேன் என்று பேசி வருகிறார். இதுவொருபுறமிருக்க தென் மாவட்டங்களில் எம்ஜிஆர் என்ற பெயருக்கு இன்னும் மவுசு உள்ளது என்பதை தெரிந்து கொண்ட கமல் எம்ஜிஆரை வைத்து காய் நகர்த்த பார்ப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கமல் ஹாசன் அரசியல்வாதி கிடையாது. ஓய்வு நேரத்தில் பொழுது போகாமல், அரசியலுக்கு வந்திருக்கிறார். எம்ஜிஆரை பிறர் ரசிக்கலாம்; ஆனால் அவரை சொந்தம் கொண்டாட அதிமுகவுக்கு மட்டுமே உரிமை உள்ளது என்றார்.