’முதல்வருக்கு ஒரு வரவேற்பும்; ஒரு கோரிக்கையும்’ கமல்ஹாசன் ட்விட்
’புதிய கல்விக் கொள்கை’ கடந்த இரண்டு நாள்களாக ஊடகங்கள் அதிகம் உச்சரித்த வார்த்தை இதுவாகத்தான் இருக்கும். அந்தளவுக்கு இது குறித்து கருத்துகளைத் தலைவர்கள் கூறிய வண்ணமிருக்கின்றனர்.
’புதிய கல்விக் கொள்கை’ இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு 2017 ஆண்டிலிருந்து உருவாக்கியது. இதனை கடந்த ஆண்டு (2019) மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியாலிடம் கொடுத்தது. அதன்மீது நாட்டு மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. சில நாள்களுக்கு முன் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றிருக்கிறது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவைச் சந்தித்து மனித வள மேம்பாட்டு அமைச்சர் கல்விக் கொள்கையை அளித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையில் பெரும்பாலான தமிழகக் கட்சிகள் ஒருமுனையில் நின்று எதிர்ப்பது மும்மொழிக் கல்வித் திட்டத்தையே. புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கை அம்சத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறுத்து இரு மொழி கல்வியே நீடிக்கும் என்று சொல்லியிருக்கிறார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொல் திருமாவளவன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழக முதல்வருக்கு ஒரு வரவேற்பும் ஒரு கோரிக்கையும் வைத்திருக்கிறார்.
இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’மும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது. அதே நேரம் National Assessment Centre, PARAKH, National Testing Agency, National Curricular Framework போன்ற அமைப்புகள் கல்வியில் மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதை எதிர்ப்பதும் அவசியம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது.
அதே நேரம் National Assessment Centre, PARAKH, National Testing Agency, National Curricular Framework போன்ற அமைப்புகள் கல்வியில் மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதை எதிர்ப்பதும் அவசியம்.— Kamal Haasan (@ikamalhaasan) August 3, 2020