டிரம்பை எதிர்த்த இந்திய-அமெரிக்கருக்கு முக்கிய பதவி வழங்கிய ஜோ பைடன்!
அதிபர் டிரம்ப் அரசின் கீழ் வெளியுறவுத் துறை அதிகாரியாகச் செயல்பட்டு, அவரின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட அதிருப்தியில் இந்திய அமெரிக்கரான உஸ்ரா ஜியோ பதவி விலகினார். தற்போது இவருக்கு அதே வெளியுறவு விவகாரத் துறையில் முக்கிய பொறுப்பை புதிய அதிபராகப் பதவியேற்கவுள்ள ஜோ பைடன் கொடுத்துள்ளார்.
பைடன் தனது நிர்வாகக் குழுவில் 20 இந்திய-அமெரிக்கர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கியுள்ளார். அதில் 13 பெண்களும் அடக்கம். அவர்களில் ஒருவர் தான் உஸ்ரா ஜியா. இவர் அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் வெளியுறவுத் துறை அதிகாரியாகச் செயல்பட்டுவந்தார்.
2018ஆம் ஆண்டு டிரம்பின் வெளியுறவுக் கொள்கை தனக்கு பிடிக்கவில்லை என்று கூறி பதவியை ராஜினாமா செய்தார். தற்போது இவர் உலகில் அமைதியை நிலைநாட்டும் கூட்டணியின் தலைவராகச் செயல்பட்டுவருகிறார்.
இவருக்கு கடந்த 20 வருடங்களாக தெற்காசியா, ஐரோப்பா உள்ளிட்ட பிராந்தியங்களில் வெளியுறவுத் துறையில் பணியாற்றியிருக்கிறார். இதனால் ராஜாங்க ரீதியிலான அனுபவம் கொண்டவராகப் பார்க்கப்படுகிறார். அதுமட்டுமல்லாமல், மனித உரிமைகள் உள்ளிட்ட பலதரப்பட்ட விவகாரங்களிலும் அனுபவம் பெற்றவராக இருக்கிறார்.
இதனைக் கருத்தில் கொண்டு பைடன் நிர்வாகத்தில் குடிமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள் ஆகியவற்றிற்கான செயலாளராக உஸ்ரா ஜியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
46ஆவது அமெரிக்க அதிபராக ஜோ பைடன் நாளை மறுநாள் (ஜன.20) பதவியேற்கிறார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்கிறார்.