ஈரோட்டில் ஆசிரியை வீட்டில் நகை கொள்ளை; பட்டப்பகலில் நடந்த துணிகரம்!
தனியார் பள்ளி ஆசிரியை வீட்டில் பட்டப்பகலில் 2 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு சாஸ்திரி நகரில் வசித்து வரும் தம்பதி சுரேஷ்(50)-கல்யாணி(47). இவர்களுக்கு 12 வயதில் மகன் இருக்கிறார். ஈரோடு கலைமகள் பள்ளியில் ஆசிரியராக இருக்கும் கல்யாணி, நேற்று காலை தனது மகனை டியூஷனுக்கு அனுப்பி வைத்துவிட்டு, தானும் பள்ளிக்கு சென்றுள்ளார். கல்யாணியின் கணவரும் வழக்கம் போல பணிக்கு சென்றிருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை 2.30 மணிக்கு வீடு திரும்பிய கல்யாணி, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 சவரன் நகை, ரூ.50 ஆயிரம் பணம், வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அப்பகுதி போலீசாரிடம் புகார் அளித்திருக்கிறார்.
அந்த புகாரின் பேரில் கல்யாணி வீட்டிற்கு அருகே இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போலீசார், அவரது வீட்டில் இருந்து எல்லாரும் வெளியே சென்றவுடன் பைக்கில் வந்த 2 கொள்ளையர்கள் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.