உடல்நலக் குறைவு… ஜப்பான் பிரதமர் ராஜினாமா செய்ய முடிவு
உடல்நலக் குறைவு காரணமாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தன் பதவியை ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஜப்பான் பிரதமராக ஷின்சோ அபே உள்ளார். அவர் தன்னுடைய பதவியை உடல்நலக் குறைவு காரணமாக ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தகவலை ஜப்பான் நாடாளுமன்றத்தின் ஆளுங்கட்சியான லிபரல் டெமாக்ரடிக் பார்ட்டி தலைமைச் செயலாளர் ஹிரோஷிஜி சீகோ உறுதி செய்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விரைவில் பிரதமர் அபே பத்திரிகையாளர்களை சந்தித்து தன்னுடைய முடிவை அறிவிப்பார். அவருக்கு பெருங்குடல் அழற்சி பாதிப்பு ஒன்று, இரண்டு ஆண்டுகளாக உள்ளது. சமீபத்தில் உடல்நல பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து அடிக்கடி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு அவர் பதவியில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜப்பான் பிரதமராக நீண்ட காலம் இருப்பவர் அபே. 2012ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆட்சியில் உள்ளார். ஜப்பான் நாட்டின் முக்கியத் தலைவராக கருதப்படுகிறார். உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்ற பெயரை ஜப்பான் தொடர்ந்து தக்க வைக்க அவர்தான் காரணம் என்று கூறப்படுகிறது. அவரது உடல்நலம் பாதிக்கப்படவே, மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் அவர் பதவி விலக முடிவெடுத்ததாக அறிவிப்பு வெளியாகி இருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.