ஜம்மு அண்டு காஷ்மீர் துணை நிலை கவர்னர் கிரிஷ் சந்திரா திடீர் ராஜினாமா.. புதிய பதவிக்கு செல்வதாக தகவல்
2019 ஆகஸ்ட் 5ம் தேதியன்று ஜம்மு அண்டு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு திரும்ப பெற்றது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. கடந்த அக்டோபர் 31ம் தேதியன்று ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் துணைநிலை கவர்னராக கிரிஷ் சந்திரா மர்மு நியமனம் செய்யப்பட்டார். 1985ம் ஆண்டு குஜராத் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான மர்மு காஷ்மீரின் துணைநிலை கவர்னராக பதவியேற்று 9 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக ஆல் இந்தியா ரேடியா தெரிவித்தது.
காஷ்மீருக்காக சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு நேற்றோடு ஒராண்டு நிறைவடைந்த நிலையில், துணை நிலை கவர்னர் சந்திரா மர்மு தனது பதவியை ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேசமயம், நாட்டின் உயர்ந்த பதவிகளில் ஒன்றான தலைமை கணக்கு தணிக்கையாளர் பதவிக்கு மர்மு செல்வதால்தான் அவர் தனது துணைநிலை கவர்னர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல். தற்போது தலைமை கணக்கு தணிக்கையாளராக இருக்கும் ராஜீவ் மெஹ்ரிஷி இந்த வாரம் ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1ம் தேதியன்று கிரிஷ் சந்திரா மர்மு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசம் கடந்த ஒரு வருட காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டது. சிலர் கடந்த 70 ஆண்டுகளில் முதல் முறையாக மின்சாரத்தை பார்க்கின்றனர் என தெரிவித்தார். தற்போது ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் அடுத்த துணைநிலை கவர்னராக யார் வரப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.