ஜல்லிக்கட்டு வழக்குகள் ரத்து : அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு!
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடந்த 2017ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தக்கூடாது என்ற அறிவிப்பு, தமிழக இளைஞர்களை வெகுண்டெழச் செய்தது. உரிமையை மீட்டெடுக்க சென்னை மெரினாவில் ஜனவரி 16-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடந்த நடைபெற்ற அந்த போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. அச்சமயம் இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இளைஞர்களின் இந்த மாபெரும் போராட்டத்தையடுத்து, ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடை நீக்கப்பட்டது. இருப்பினும், போராட்டத்தின் போது தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தன. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது காவலர்களை தாக்கியது, வாகனங்களுக்கு தீ வைப்பு உள்ளிட்ட வழக்குகள் தவிர பிற வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என அண்மையில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன் படி, தற்போது ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தொடரப்பட்ட 308 வழக்குகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒரு சில வழக்குகளை தவிர பிற வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.