தனிமை படுத்திக்கொண்ட ரஷ்ய வெளியுறவு அமைச்சர்
கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதுமே அச்சம் தரும் அளவில் வேகமாகப் பரவி வருகிறது. சில நாடுகளில் புதிய நோயாளிகள் எண்ணிக்கை குறைந்தாலும், பல நாடுகளில் மீண்டும் இரண்டாம் அலை கொரோனா பரவல் தொடங்கி விட்டது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 4 கோடியே 42 லட்சத்து 52 ஆயிரத்து 521 பேர். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 11 லட்சத்து 71 ஆயிரத்து 478 பேர்.
கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 24 லட்சத்து 47 ஆயிரத்து 384 நபர்கள். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 10,63,659 பேர்.
பல நாடுகளின் அதிபர்கள், பிரதமர்களையும் கொரோனா விட்டுவைக்க வில்லை. சமீபத்தில்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனா தொற்றி சிகிச்சை முடிந்து வந்தார். இந்நிலையில், ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார்.
அவர் சந்தித்த நபர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் செர்ஜி லாவ்ரோவ்க்கு கொரோனாவுக்கான எவ்வித அறிகுறிகளும் இல்லை. ஆயினும் தன்னை 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள முடிவெடுத்திருக்கிறார்.
இதனால், அவர் சந்திக்க, கலந்துகொள்ள விருந்த நிகழ்ச்சிகளின் திட்டமிடல் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.