’இட ஒதுக்கீட்டை எதிர்கிறோம்’ இதுதான் போஸ்டர் புகழ் My India Party கட்சியின் கொள்கையா?
நகரங்களின் பல இடங்களில் ’போதும் போதும் ஏமாந்தது போதும்’ என்று சொல்லும் போஸ்டர்களைப் பார்த்திருப்பீர்கள். முதல்நாள் இது மட்டுமே இருந்தது. அடுத்த நாள் My India Party எனும் கட்சி தொடங்கியிருக்கும் செய்தியைச் சொல்லி அதேபோன்ற போஸ்டர் ஒட்டியிருந்தது.
சட்டென்று பார்த்தவர்கள் ஏதோ நகைக்கடை விளம்பரம் என்றே பலரும் நினைத்துவிட்டார்கள். சரி, My India Party கட்சியில் என்னதான் சொல்லியிருக்கிறார்கள் என்று, அவர்களின் இணையதளம் பக்கம் சென்றோம்.
அந்தக் கட்சியின் கொள்கைகளாக சமத்துவம், கல்வி, தண்ணீர், வேளாண்மை, வேலை வாய்ப்பு, ஆரோக்கியம் என்று ஆறு தலைப்புகளில் இருந்தது. சரி, முதலில் சமத்துவத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்த்தேன். முதல் விஷயமே அதிர்ச்சியாக இருந்தது.
அரசியலமைப்பை உருவாக்கிய கலைஞர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் உணர்வை மிகைப்படுத்தி விட்டதாக ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது நேரடியாக அம்பேத்கர் என்று எழுதினால் சிக்கலாகும் என கலைஞர்கள் எனப் பூசி மெழுகியிருக்கிறார்கள்.
சபாஷ், அடுத்து என்ன என்று தொடர்ந்தால், ‘அரசியல்வாதிகள் சமூக வெறுப்பைத் தூண்டுவதற்கும், அவர்களுக்கு ஆதரவாக வாக்குகளைத் துருவப்படுத்துவதற்கும் ஒரு கருவியாக இடஒதுக்கீட்டைப் பயன்படுத்துகின்றனர்’ என்று சொல்லியிருக்கிறர்கள். அதற்கு அடுத்த வரிதான் ரொம்பவே முக்கியமானது.
’My India Party நாங்கள் முன்பதிவு முறையை கடுமையாக எதிர்க்கிறோம்’ என்று இருக்கிறது. இதில் முன்பதிவு என்று எதை சொல்கிறார்கள் என்று குழப்பமாக இருந்தது. உடனே இதன் ஆங்கில வெர்ஷனைப் பார்த்தால் ரிசர்வேசனைத்தான் தமிழில் முன்பதிவு என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
இறுதியாக அக்கட்சியின் இடஒதுக்கீடு பற்றி சொல்லுகையில் ’சாதி வைத்து இடஒதுக்கீடு கொடுக்காமல், பொருளாதார அடிப்படையில் கொடுக்க வேண்டும்’ இதுக்குத்தான் இப்படிச் சுத்தியிருக்கிறார்கள்.
இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு 69 சதவிகித இடஒதுக்கீடு நடைமுறைத்தி, சமூக நீதியை நிலைநிறுத்தும் மாநிலமாக தமிழநாடு இருக்கிறது. இங்கே தொடங்கும் கட்சி இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருப்பது என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு என்பது சாதிய ஏற்றத்தாழ்வுகளைப் போக்க என்ற புரிதலில்தான் நடைமுறைப்படுத்த படுகிறது. ஆனால், இந்தக் கட்சியினர் இடஒதுக்கீட்டை வறுமை ஒழிப்பு திட்டம் என்பதாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
இந்தக் கட்சியின் சுவரொட்டிகள், டிவிக்களில் விளம்பரங்கள் என பணம் தண்ணீராய் செலவழிக்கப்படுவதைப் பார்த்தால், தேர்தல் நேரத்தில் இன்னும் பல விஷயங்களை முன்னெடுப்பார்கள் என்றே தோன்றுகிறது.
இந்தக் கட்சி விளம்பரங்களில் ‘போது போதும்… என சொன்னது இடஒதுக்கீடு கொடுத்தது போதும் என்பதுதான் போல.